மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளராக இருந்த சஞ்சய் பாங்கருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியுடன் ரவிசாஸ்திரி மற்றும் சக பயிற்றுவிப்பாளர்கள் பணிக்காலம் முடிவுற்றது.
இதையடுத்து வரும் 2021ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் ரவி சாஸ்திரியை நியமித்து கபில்தேவ் தலைமையிலான சிஏசி குழு அறிவித்தது.
இந்நிலையில், துணை பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை மூத்த தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.
அதில் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களக்காப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்துக்குப் பதிலாக கிரிஷ் டோங்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற சுனில் சுப்ரமணியம் இந்திய அரசின் தூதர்களிடத்தில் முறை தவறி நடந்து கொண்டதாக புகார் எழுந்ததால் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களில் சஞ்சய் பாங்கருக்குப் பதில் விக்ரம் ரத்தோர் பந்தடிப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
50 வயதாகும் விக்ரம் ரத்தோர் ஆடியதோ 6 டெஸ்ட் போட்டிகள் 7 ஒருநாள் போட்டிகளே ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பரிந்துரைகளின்படி ரத்தோருக்கு முதலிடமும் பாங்கருக்கு 2வது இடமும் இங்கிலாந்தின் மார்க் ராம்பிரகாஷுக்கு 3ஆம் இடமும் கிடைத்தது. இதனையடுத்து ரத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.