பெசில்: உலக வெற்றியாளர் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சென் யூ ஃபேய்யை வீழ்த்தி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ ஃபேய் மோதினர்.
தொடக்கத்திலிருந்தே இந்திய வீராங்கனை சிந்து சிறப்பாகச் செயல்பட்டு புள்ளிகளைக் குவித்தார்.
மொத்தம் 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சீன வீராங்கனை சென் யூ ஃபேய்யை 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வாகை சூடினார்.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக வெற்றியாளர் பூப்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.
“எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் இன்னும் திருப்தி அடையவில்லை. இன்னும் ஓர் ஆட்டம் இருக்கிறது. தங்கப் பதக்கம் வெல்வதே என் இலக்கு. ஆனால் அது எளிதல்ல. இறுதி ஆட்டத்தில் யாரைச் சந்தித்தாலும் சரி. நான் முழு கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட வேண்டும்,” என்றார் சிந்து.
இதற்கிடையே, சிங்கப்பூர் வீராங்கனை இயோ ஜியா மின் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கி
போட்டியிலிருந்து வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அவர் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானோனை எதிர்கொண்டார். 2013ஆம் ஆண்டில் உலக வெற்றியாளர் பட்டத்தை வென்ற ரட்சனோக் இந்த ஆட்டத்தை 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றினார்.
ரட்சனோக்கிடம் இயோ தோற்பது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெர்மன் பொது விருதில் இயோவை ரட்சனோக் தோற்கடித்தார்.