ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் 10 மீட்டர் 'ஏர் ரைஃபிள்' பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், 20 (படம்), தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இவர் கலந்துகொண்டது இதுவே முதன்முறை. 251.7 புள்ளிகளைப் பெற்ற இவர், அரைப் புள்ளி வித்தியாசத்தில் பிரிட்டிஷ் வீராங்கனை சியோனாய்ட் மெக்கின்டோஷை பின்னுக்குத் தள்ளினார்.
தமிழகத்தின் கடலூரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு இடம்பெயர்ந்தார்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் 'ஏர்' பிரிவில் அபூர்வி சாண்டெலா, அஞ்சலி பகவத் என மேலும் இரு இந்திய வீராங்கனைகளும் தங்கம் வென்று, நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.

