கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று, 60 புள்ளிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெறும் முனைப்புடன் களம் காண்கிறது.
இந்த ஆட்டத்திலும் இந்திய அணியே வாகை சூடும் பட்சத்தில் சொந்த மண்ணில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூவகைத் தொடர்களிலும் ஒரு போட்டியில்கூட வெல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் தலைக்குனிவைச் சந்திக்கும்.
அத்துடன், முன்னாள் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடிக்கவும் இப்போதைய தலைவர் விராத் கோஹ்லிக்கு அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது.
அணித்தலைவராக இவ்விருவரும் இதுவரை ஆளுக்கு 27 போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளனர். இன்று தொடங்கும் 2வது போட்டியிலும் கோஹ்லி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றால் ஆக வெற்றிகரமான அணித்தலைவர் என்ற பெருமை கோஹ்லியைச் சென்று சேரும்.
இந்திய அணித் தலைவர்
களுள் அதிகமான வெற்றி விகிதத்தையும் (57.44%) கோஹ்லியே வைத்துள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகத் திகழ்ந்த கிங்ஸ்டன் சபைனா பார்க் விளையாட்டரங்கம் அண்மைக் காலமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்து வருகிறது. பந்தும் தாழ்வாக எழும்பக்கூடும் என்பதால் பந்தடிப்பாளர்கள் சற்று சிரமத்தை எதிர்நோக்கக்கூடும்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில், முதல் போட்டியில் ஆடிய அதே பதினொரு வீரர்களே விளையாடக்கூடும். ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மிகுவெல் கம்மின்சுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கீமோ பால் சேர்க்கப் பட்டுள்ளார்.
வானிலை முன்னறிவிப்பைப் பார்க்கும்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2002ஆம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தியதில்லை.
சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 10.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

