ஹேம்பர்க்: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை 4-2 எனும் கோல் கணக்கில் நெதர்லாந்து வீழ்த்தியது.
இந்த ஆட்டம் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தங்கள் குழு திண்ணமாக வெற்றி பெறும் என்று ஜெர்மன் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
அதன்படியே, ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் ஜெர்மனி அதன் முதல் கோலைப் போட்டு முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து கோல்கள் போட ஜெர்மனிக்கு வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை அது பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இடைவேளையின்போது ஆட்டம் 1-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனிக்கு சாதகமாக இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை மாறியது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் நெதர்லாந்து கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கழித்து இரண்டாவது கோலைப் போட்ட நெதர்லாந்து முன்னிலை வகித்து ஜெர்மனியை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
துவண்டுவிடாமல் போராடிய ஜெர்மனிக்கு ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் பலன் கிட்டியது.
பெனால்டி எல்லைக்குள் இருந்தபோது நெதர்லாந்து தற்காப்பு ஆட்டக்காரரின் கையில் பந்து பட்டதாகக் கூறி ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர்.
கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் டோனி குரூஸ்.
ஆனால் ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டோன்யேல் மாலென் தமது அணியின் மூன்றாவது கோலைப் போட்டார்.
அதன் பிறகு ஆட்டம் முடிய ஒருசில வினாடிகள் மட்டும் எஞ்சியிருந்தபோது நெதர்லாந்தின் நான்காவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தார் வினால்டம்.
“எங்களைவிட நெதர்லாந்து மிகச் சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முடிவு நியாயமானது. ஒரு கோல் போட்டு முன்னிலை வகித்தபோதும் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள தவறினோம். தாக்குதலில் மட்டும் கவனம் செலுத்தி பந்தை எதிரணியிடம் பலமுறை பறிகொடுத்தோம்,” என்று ஜெர்மனியின் நிர்வாகி ஜோக்கிம் லோ ஏமாற்றம் தெரிவித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் சுலோவாக்கியாவை 4-0 எனும் கோல் கணக்கில் குரோவேஷியா பந்தாடியது.
அசர்பைஜானுக்கு எதிரான ஆட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் வேல்ஸ் கைப்பற்றியது.