பல்லேகெலே: இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்றது.
முதலில் பந்தடித்த இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் சேர்த்தது.
அதை அடுத்து நியூசிலாந்து பந்தடித்தது.
மூன்றாவது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கொலின் முன்றோ ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை மலிங்கா படைத்தார்.
அடுத்து வந்த ருதர்ஃபோர்டு ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து கிராண்ட்ஹோம் மலிங்காவிடம் சிக்கி ஆட்டமிழந்தார்.
ஹாட்ரிக் சாதனையுடன் நின்றுவிடாமல் அடுத்த வந்த ராஸ் டெய்லரையும் மலிங்கா ஆட்டமிழக்கச் செய்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை படைத்தார்.