2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பாலஸ்தீனத்துடன் சிங்கப்பூர் நேற்று மோதியது. இந்த ஆட்டம் நேற்று ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏமனுடன் சமநிலை கண்ட சிங்கப்பூர் இந்த ஆட்டத்தில் வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் களமிறங்கியது.
சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே அரங்கம் அதிர்ந்தது. பாலஸ்தீனத் தற்காப்பு ஆட்டக்காரர்கள் செய்த பிழையைப் பயன்படுத்தி ஷகிர் ஹம்சா பந்தை வலைக்குள் அனுப்பினார்.
ஆனால் துவண்டுவிடாமல் போராடிய பாலஸ்தீனம் அடுத்த சில நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது.
பாலஸ்தீனத்தின் அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் கலங்காமல் விளையாடிய சிங்கப்பூர் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டது. பாலஸ்தீனத்தின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் சாஃப்வான் பஹாருதீன்.
இடைவேளையின்போது 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கடுமையாகப் போராடின. மேலும் கோல்கள் போட்டு உறுதி செய்ய சிங்கப்பூர் முயற்சி செய்ய, ஆட்டத்தைச் சமன்செய்ய பாலஸ்தீனம் போராடியது.
இருதரப்பு வீரர்களும் மூர்க்கத்தனமாக விளையாட, ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கைகலப்பு மூண்டது.