கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்தப் போட்டிகளில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் தலைவர் லசித் மலிங்கா, முன்னாள் அணித் தலைவர் மேத்யூஸ், திசர பெரேரா உட்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதில் சந்தேகமாக உள்ளது.
2009ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.
அதன் பிறகு பாதுகாப்பு கருதி அனைத்துலக கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.