சவுத்ஹேம்டன்: யூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வாகை சூடின.
குறிப்பிடும்படியாக, கொசோவோ குழுவுக்கு எதிராக இங்கிலாந்து நேற்று பொருதிய ஆட்டம் கோல்களும் விறுவிறுப்பும் நிறைந்து காணப்பட்டது. இந்த ஆட்டத்தை 5-3 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து தற்காப்பு வீரர் மைக்கல் கீனின் தவறு காரணமாக, ஆட்டம் தொடங்கிய 35 வினாடிகளிலேயே அக்குழுவுக்கு எதிராக கொசோவோ தரப்பில் ஒரு கோல் போடப்பட்டபோது இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். எனினும், சரிவிலிருந்து உடனடியாக மீண்ட அக்குழு, ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த கோல் மூலம் எட்டே நிமிடங்களில் ஆட்டத்தைச் சமன் செய்தது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தரப்பில் நம்பிக்கை நட்சத்திரமாக 19 வயது ஜேடொன் சேஞ்சோ திகழ்ந்தார். இங்கிலாந்தின் இரு கோல்களைப் போட்டவர் இவரே. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஹேரி கேன் மற்றொரு கோலைப் போட, 38வது நிமிடத்தில் கொசோவோ தற்காப்பு ஆட்டக்
காரர் ஒருவர் தவறிழைத்ததன் காரணமாக சொந்த வலைக்குள் கோல் புகுந்தது.
தாக்குதலில் மூர்க்கத்தனமாக விளங்கிய கொசோவோ, அதே வேளையில், அதன் தற்காப்பில் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் கோல்களை அடித்தனர்.
‘ஏ’ பிரிவில் தான் இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களையும் இங்கிலாந்து வென்றது. இந்தப் பிரிவிலேயே ஆக அதிகமாக 19 கோல்களை அக்குழு புகுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், உலகக் கிண்ண அல்லது யூரோ கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து தோற்காதது குறிப்பிடத்தக்கது.