டோஹா: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது காற்பந்து துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, குழுத் தலைவர் சுனில் சேத்திரி தலைமையிலான இளம் இந்தியக் குழு, ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் தன்னைவிட முன்னணியில் இருக்கும் பல நாடுகளுக்குக் கடும் சவால் அளித்து வருகிறது.
இதற்கு அண்மைய உதாரணமாக விளங்கியது, நேற்று கத்தாரின் தலைநகர் டோஹாவில் அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டம். கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியக் குழு யாரும் எதிர்பாராத வகையில் ஓமானுக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆசிய வெற்றியாளரான கத்தார், தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் குழுவை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியக் குழுத் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்திரி, காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இது அக்குழுவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் கத்தார் 62வது இடத்திலும் இந்தியா 103வது இடத்திலும் இருக்கின்றன. இது ஒரு தரப்பு ஆட்டமாகத்தான் இருக்கும் எனப் பலரும் நினைத்த நிலையில், இந்தியாவின் நேர்த்தியான தற்காப்பு ஆட்டமானது, கத்தாரின் அனைத்து கோல் முயற்சிகளையும் வெற்றிகரமாகத் தடுத்தது.
பெரும்பாலும் பந்து, கத்தார் வீரர்களிடமே இருந்தாலும் இறுதிவரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், கோல் எதுவும் விழாமல் ஆட்டம் சமநிலை கண்டது.
இந்த ஆண்டு கத்தாரிடம் தோல்வி அடையாத ஒரே காற்பந்துக் குழு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.