வில்னியஸ்: ‘பி’ பிரிவு யூரோ தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் லித்துவேனியா குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் நேற்று போர்ச்சுகல் அபார வெற்றி பெற்றது. போர்ச்சுகல் தரப்பில் பெரும்பகுதியாக நான்கு கோல்களைப் போட்ட நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அக்குழுவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்டத்தின் முதற்பாதியில் போர்ச்சுகல் ஒரு கோலை அடித்தாலும், இடைவெளிக்கு முன்பு லித்துவேனியா தரப்பில் ஒரு கோலை போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. இந்நிலையில், இரண்டாவது பாதியில் 34 வயது ரொனால்டோவின் அபார ஆட்டத்திறன் மீண்டும் வெளிப்பட்டது. சீரான இடைவெளியில் போர்ச்சுகலுக்காக மற்ற மூன்று கோல்களை அவர் போட்டார். ஆட்டம் முடிவடையும் தருணத்தில் போர்ச்சுகலின் எஞ்சிய கோலை வில்லியம் கவால்யோ போட்டார்.
நடப்பு ஐரோப்பிய வெற்றியாளரான போர்ச்சுகல், இந்த ஆட்டத்தில் லித்துவேனியாவுக்கு எதிராக 31 கோல் போடும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகலுக்காக தான் விளையாடிய 160 ஆட்டங்களில் 93 கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார். யூரோ தகுதிச் சுற்றில் தான் விளையாடிய முதல் இரு ஆட்டங்களில் சமநிலைகண்ட போர்ச்சுகல், இப்போது தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வென்றுள்ளது.
‘பி’ பிரிவு பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் அது இரண்டாவது நிலையில் உள்ளது. முதலிடம் வகிக்கும் உக்ரேனைவிட அது ஐந்து புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது.