மாலே: உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் மாலத் தீவுகளை 5-0 எனும் கோல் கணக்கில் சீனா பந்தாடியது. சீனாவுக்காக விளையாடிய முதல் ஆட்டத்திலேயே எல்கேசன் (படம்) எனும் 30 வயது ஆட்டக்காரர் இரு கோல்களைப் போட்டார். இவர் பிரேசிலில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சீனப் பெயர் அய் கேசன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டில் கத்தாரில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் எனும் நோக்கில் உலக வல்லரசு நாடான சீனா, பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரேசில் போன்ற வெளிநாடுகளில் பிறந்து சீனக் குடியுரிமை பெற்ற தனிநபர்களை சீனக் காற்பந்துக் குழுவில் விளையாடுவதற்கு அனுமதிக்க, அண்மையில் அதன் கொள்கையில் சில மாற்றங்களை சீன காற்பந்துச் சங்கம் நடைமுறைப்படுத்தியது. நீண்ட காலமாகவே, ஒலிம்பிக் போட்டிகளில் தோற்கடிக்க முடியாத சக்தியாக விளங்கி வரும் சீனா, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு ஒருமுறை மட்டுமே தகுதிப் பெற்றிருந்தது.
இந்நிலையில், உலகக் கிண்ணக் கனவை நனவாக்க, வெளிநாடுகளில் பிறந்து சீனக் குடியுரிமை பெற்ற வீரர்கள் பெரிதும் கைகொடுப்பர் என்று சீனக் காற்பந்துச் சங்கம் திடமாக நம்புகிறது. தற்போது சீனக் காற்பந்து லீக்கில் விளையாடும் குழுக்களில் சீனக் குடியுரிமை பெற்ற ஒன்பது வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
இத்தகைய வீரர்களை சீனக் காற்பந்துக் குழுவில் இடம்பெறச் செய்வதால் சீனாவிற்கு உடனடியாக பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பே மாலத் தீவுகளுக்கு எதிரான மாபெரும் வெற்றி.