லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) முன்னணி காற்பந்துக் குழுக்களான செல்சி, மான்செஸ்டர் யுனைடெட், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஆகியவை எதிர்பார்த்தபடி நேற்று முன்தினம் வெற்றி பெற்றன.
குறிப்பாக, உல்வ்ஸ் குழுவுக்கு எதிராக கோல்கள் நிறைந்த ஆட்டத்தில் செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.
உல்வ்ஸ் குழுவை 5-2 எனும் கோல் கணக்கில் வென்ற செல்சி, எட்டு புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
மற்றோர் ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸ் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் வீழ்த்தியது. இதில் தென்கொரிய வீரர் சோன் ஹுவெங் மின், ஸ்பர்ஸ் தரப்பில் இரு கோல்களைப் போட்டார். அதோடு, எதிரணியின் வலைக்குள் சொந்த கோல் ஒன்று விழுவதற்கும் அவர் வழிவகுத்தார்.
யுனைடெட், லெஸ்டர் சிட்டி, செல்சி ஆகிய குழுக்களைப் போல எட்டு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் ஸ்பர்ஸ் குழு பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
லெஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வென்றது. பெனால்டியின் மூலம் ஆட்டத்தின் ஒரே கோலை மார்கஸ் ரேஷ்ஃபர்ட் போட்டார்.
இப்பருவத்தின் முதல் இரு ஆட்டங்களில் சமநிலை கண்டு, அதற்கு பிந்திய இரு ஆட்டங்களில் வென்ற லெஸ்டருக்கு இது முதல் தோல்வியாகும்.