சாங்சோவ்: சீனப் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
சீனாவின் சாங்சோவ் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக வெற்றியாளரான சிந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லி சுவேரியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இப்போட்டி 34 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து முன்னேறியிருக்கிறார்.
முன்னதாக நடந்த மற்றோர் ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை பூசனனிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் 10-21, 17-21 எனும் செட் கணக்கில் அவர் தோல்வியுற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் சாய் பிரனீத் வெற்றி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

