பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழுவிற்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பிரபல ஸ்பானிய குழுவான ரியால் மட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சியளித்தது.
ரியாலின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார் அக்
குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் இந்நாள் பிஎஸ்ஜி வீரருமான ஏங்கல் டி மரியா. அவர் இரண்டு கோல்களை அடித்தார். இன்னொரு கோலை தாமஸ் மியூனியர் போட்டார்.
இந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் ரியால் குழுவினர் ஒருமுறைகூட பிஎஸ்ஜியின் வலையை நோக்கிச் சரியாக பந்தை உதைக்கவில்லை. இது ரியால் நிர்வாகி ஸினடின் ஸிடானுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
“கேரத் பேல், கரிம் பென்சிமா, ஈடன் ஹசார்ட் என மூன்று முன்னணி ஆட்டக்காரர்கள் இருந்தும் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போனது கவலை தருகிறது,” என்றார் ஸிடான்.
பிஎஸ்ஜி குழுவினர் தங்களைவிட எல்லாத் துறைகளிலும், குறிப்பாக மத்தியத் திடல் பகுதியில் மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, ஹெக்டர் ஹெரேரே கடைசி நிமிடத்தில் போட்ட கோலால் யுவென்டசுக்கு எதிரான ‘டி’ பிரிவு ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் சமன் செய்தது.