சண்டிகர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் மொகாலியில் நடந்தது.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் குவின்டன் டி காக் 52 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 49 ஓட்டங்களையும் குவித்தனர். தீபக் சாஹர் நான்கு ஓவர்களை வீசி, 22 ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டம்
இழந்தபோதும் அடுத்து இணைந்த ஷிகர் தவானும் விராத் கோஹ்லியும் அதிரடியாக ஆடி ஓட்டம் குவித்தனர். தவான் (40), ரிஷப் பன்ட் (4) ஓட்டங்களில் வெளியேற, நிலைத்து ஆடிய கோஹ்லி, ஆறு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை விளாசி, ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்ற கோஹ்லி, ரோகித் சர்மாவின் இரு சாதனைகளையும் முறியடித்தார். அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை (2,441) எடுத்தவர், அதிக முறை 50 ஓட்டங்களைக் கடந்தவர் (22) என்ற இரு சாதனைகளும் கோஹ்லி வசமாயின. அதேபோல, டி20 போட்டிகளில் அதிக முறை (11) ஆட்ட நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவர் அஃப்ரிடியுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.