சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஃபார்முலா1 கார் பந்தயத்தை முதல் நிலையில் இருந்து தொடங்கியதால் ஃபெராரி குழுவின் மொனாக்கோ வீரர் சார்ல்ஸ் லெக்லெர்க், 21 (படம்), பந்தயத்தை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில் சக ஃபெராரி வீரரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் நேற்று முன்தினம் இரவு நடந்த அப்பந்தயத்தில் வெற்றி மகுடம் சூடினார். லெக்லெர்க் இரண்டாவதாக வந்தார்.
இம்மாதத்தின் முதல் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பெல்ஜியத்திலும் இத்தாலியிலும் நடந்த எஃப்1 பந்தயங்களில் பட்டம் வென்றிருந்தார் லெக்லெர்க். இந்நிலையில், சிங்கப்பூர் பந்தயத்திலும் வாகை சூடி, 'ஹாட்ரிக்' சாதனை படைப்பதற்குத் தமக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை ஃபெராரி குழு எடுத்த முடிவு பறித்துவிட்டதாகக் கருதுகிறார் லெக்லெர்க்.
இவர் முதலாவதாக 'பிட் ஸ்டாப்' எடுக்கவிருந்த நிலையில், திடீரென வெட்டலுக்கு முதலில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுற்றுக்குப் பின்னரே லெக்லெர்க் 'பிட் ஸ்டாப்'
பிற்கு வர முடிந்தது.
கிடைத்த சில வினாடி இடைவெளியில் வெட்டல் முதலிடத்திற்கு முன்னேறினார்.
"காரில் இருந்த எனக்கு இம்முடிவு ஆச்சரியமளித்தது. குழுவின் நன்மைக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். முதல் இரு இடங்களையும் நாங்களே பிடிக்க இதுதான் ஒரே வழி. அதுதான் காரணம் எனில் அதை நான் முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பேன். ஆனால், காரோட்டியபடி இருந்த எனக்கு இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனாலும், ஒட்டுமொத்த முடிவு பெரும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது," என்றார் லெக்லெர்க்.
இந்தப் பருவத்தில் இன்னும் ஆறு பந்தயங்கள் மீதமுள்ள நிலையில் லெக்லெர்க் 200 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். மெர்சிடிஸ் குழு வீரர்களான லூவிஸ் ஹேமில்டன் 296 புள்ளிகளுடனும் வால்ட்டேரி போட்டாஸ் 231 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
அடுத்த பந்தயம் இவ்வார இறுதியில் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கவிருக்கிறது.

