உலான் உடே (ரஷ்யா): உலக குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டி வரலாற்றில் ஆக அதிக பதக்கங்களை வென்றவர் எனும் பெருமையை எட்டவுள்ளார் நட்சத்திர இந்திய வீராங்கனையான எம்.சி.மேரி கோம், 36.
ரஷ்யாவின் உலான் உடே நகரில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவருக்கு எட்டாவது பதக்கம் உறுதியாகியுள்ளது.
பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டிகள் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. அப்போட்டிகளில் இதுவரை மேரி கோம் ஆறு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இன்று நடக்கவிருக்கும் அரை இறுதியில் துருக்கியின் ககிரோக்லு பியூசனோசுடன் அவர் மோதவிருக்கிறார்.
கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா போர்கோஹைன் ஆகிய இந்திய வீராங்கனைகளும் தத்தமது பிரிவுகளில் அரையிறுதிச் சுற்றில் நுழைந்து, பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.