புனே: இந்திய, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட்டு கள் இழப்பிற்கு 36 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அணித் தலைவர் டு பிளசிஸ் 64 ஓட்டங்களும் டி காக் 31 ஓட்டங்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால், மோசமாக ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணியில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு சேர்ந்த பிலாந்தர், மஹாராஜ் இணை மிகச் சிறப்பாக விளையாடினர். மஹாராஜ் 132 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிலாந்தர் 44 ஓட்டங்களுடன் இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியில், 275 ஓட்டங்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளும் முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைவிட தென்னாப்பிரிக்க அணி 326 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.