வியன்னா: ‘மாரத்தான்’ நெடுந்தொலைவு ஓட்டத்தை இரண்டு மணிநேரத்துக்குள் முடித்த முதல் வீரர் என்ற பெருமையை கென்ய நாட்டவரான எலியுட் கிப்சோஞ்ச் பெற்றுள்ளார். இந்த மைல்கல்லை மனிதனால் எட்ட முடியுமா என்ற கேள்விக்கு இவர் பதிலைத் தந்துள்ளார்.
ஒலிம்பிக் வெற்றியாளரான இவர், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று 1 மணிநேரம், 59 நிமிடங்கள், 40 வினாடிகளில் போட்டியை முடித்தார். போட்டியின் நிறைவுக் கோட்டைத் தாண்டும்போது வெற்றிப் புன்னகையுடன் காணப்பட்ட இவரது உடலில் அதிகம் வியர்வைகூட தென்படவில்லை.
ஏதே காலை நேர ஓட்டத்தை முடித்ததுபோல காணப்பட்ட 34 வயது கிப்சோஞ்ச், “நான்கரை மாத காலமாக இதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் ஓட்டத்தை முடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் ஊடுருவியது,” என்றார்.