கார்டிஃப்: யூரோ 2020 காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பறிபோகாதபடி குரோவேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வேல்ஸ் பார்த்துக்கொண்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் யூரோ கிண்ணப் போட்டிக்கு வேல்ஸ் தகுதி பெறும் சாத்தியம் இருக்கிறது.
வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் நடைபெற்ற இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் நிக்கோலா விலாசிச் கோல் போட்டு குரோவேஷியாவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால் இடைவேளைக்கு சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது வேல்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் கேரத் பேல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
இரு குழுக்களும் வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் விளையாடின. இதில் குரோவேஷியாவின் மூர்க்கத்தனமான ஆட்டம் காரணமாக வேல்ஸ் குழுவின் பல ஆட்டக்காரர்கள் காயமுற்றனர்.
ஆட்டம் சமநிலையில் முடிய இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
இதன் விளைவாக ‘இ’ பிரிவில் ஏழு ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது குரோவேஷியா.
இரண்டாவது இடத்தில் ஹங்கேரி உள்ளது. அது குரோவேஷியாவைவிட இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அசர்பைஜான் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் ஹங்கேரி வீழ்த்தியது. மூன்றாவது இடத்தில் சிலோவாக்கியாவும் நான்காவது இடத்தில் வேல்சும் இருக்கின்றன.
மற்றோர் ஆட்டத்தில் பெலரூஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் ஹாலந்து தோற்கடித்தது.