எதிரணியைப் பிழிந்தெடுத்த இங்கிலாந்து

எதிரணியைப் பிழிந்தெடுத்த இங்கிலாந்து

2 mins read
d20564fe-f9f9-4cef-a50c-b60849033b6f
இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் ரோஸ் பார்க்லி (நடுவில்). அவர் வலை நோக்கி அனுப்பிய பந்தைத் தடுக்க பல்கேரிய கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

சோஃபியா: யூரோ 2020 காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. பல்கேரியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

இம்மாதம் 12ஆம் தேதியன்று செக் குடியரசிடம் இங்கிலாந்து 2-1 எனும் கோல் கணக்கில் தோற்றது. கடந்த 10 ஆண்டுகளில் தகுதிச் சுற்றில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது அதுவே முதல்முறை. ஆணால் அந்தத் தோல்வியால் இங்கிலாந்து துவண்டுவிடவில்லை.

பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் நடைபெற்ற ஆட்டம் அதற்குச் சான்றாக அமைந்தது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து தாக்குதலில் ஈடுபட்ட இங்கிலாந்து பல்கேரியாவைத் திக்குமுக்காட வைத்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் இங்கிலாந்தின் முதல் கோலைப் போட்டார்.

ஆட்டத்தின் 20வது, 32வது நிமிடங்களில் ரோஸ் பார்க்லி கோல்களைப் போட இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு வலுவடைந்தது. இந்நிலையில், முற்பாதி ஆட்டத்தின்போது இங்கிலாந்து ரசிகர்களை பல்கேரிய ரசிகர்கள் இனரீதியாகத் தூற்றினர்.

இதுகுறித்து இங்கிலாந்து நிர்வாகி கேரத் சவுத்கேட்டிடம் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் முறையிட்டனர். பல்கேரிய ரசிகர்களின் செயல் குறித்து நடுவரிடம் தெரிவிக்கப்பட, எச்சரிக்கை அறிவிப்பு இருமுறை செய்யப்பட்டது.

இனவாதப் பிரச்சினையை எதிர்கொள்ள ஐரோப்பிய காற்பந்துச் சங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள விதிமுறைக்கு ஏற்ப ஆட்டத்தை நடுவர் சிறிது நேரம் நிறுத்தி வைத்தார். ஆட்டத்தின் 28வது நிமிடத்திலும் 43வது நிமிடத்திலும் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பிற்பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து மேலும் மூன்று கோல்களைப் போட்டு பல்கேரியாவின் கதையை முடித்துவைத்தது. ஸ்டெர்லிங் இரண்டு கோல்களையும் ஹேரி கேன் ஒரு கோலையும் போட்டனர்.