கியேவ்: யூரோ 2020 காற்பந்துப் போட்டிக்கு உக்ரேன் தகுதி பெற்றுள்ளது.
போர்ச்சுகலுக்கு எதிராக நேற்று முன்தினம் களமிறங்கிய உக்ரேன் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது 700வது கோலைப் போட்டும் உக்ரேனின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது.
அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் போர்ச்சுகலும் தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது.
மற்றோர் ஆட்டத்தில் பிரான்சும் துருக்கியும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. இதன் விளைவாக யூரோ 2020க்கு பிரான்ஸ் இன்னும் தகுதி பெறவில்லை.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஒலிவியே ஜிரூ பிரான்சுக்காக கோல் போட்டார்.
ஆனால் ஆட்டம் முடிய ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது துருக்கி ஆட்டத்தைச் சமன்செய்தது.