தேசிய விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி இறுதி வரை கடுமையாகப் போராடியபோதும் 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோற்றுப்போனது.
உஸ்பெகிஸ்தானுக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார் ஓதில் அகமதோவ். ஆட்டம் தொடங்கிய 15வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தானுக்கு ‘ஃபிரீகிக்’ வாய்ப்புக் கிடைக்க, அகமதோவ் உதைத்த பந்து வளைந்து சென்று சிங்கப்பூர் வலைக்குள் புகுந்தது.
ஆனாலும், ஆட்டம் 1-1 என்ற சமநிலையுடனேயே இடைவேளைக்குச் சென்றது. அருகிலிருந்த எதிரணி ஆட்டக்காரரைக் காட்டிலும் உயரே தாவி, ஷாடான் சுலைமான் அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார் சிங்கப்பூரின் இக்சான் ஃபாண்டி.
இருப்பினும், அம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. இழந்த முன்னிலையை இரண்டாம் பாதி ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே திரும்பப் பெற்றது உஸ்பெகிஸ்தான். அவ்வணியின் எல்டோர் ஷொமுரோடோவ் உதைத்த பந்தை சிங்கப்பூர் கோல்காப்பாளர் இஸ்வான் மஹ்புட் பாய்ந்து தடுக்க முயன்றபோதும் அவரது எண்ணம் ஈடேறவில்லை.
பதில் கோலடித்து ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வர சிங்கப்பூர் வீரர்கள் தங்களால் ஆன அளவிற்குச் சிறப்பாகப் போராடியும் அதிர்ஷ்டம் என்னவோ உஸ்பெகிஸ்தானுக்கே இருந்தது. இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் தன் பங்கிற்கு மீண்டும் ஒரு கோலை அடித்தார் ஷொமுரோடோவ்.
ஆட்டத்தில் தோற்றபோதும் சிங்கப்பூர் வீரர்களின் செயல்பாடு, அரங்கில் குழுமியிருந்த 12,547 ரசிகர்களுக்கு மனநிறைவு அளிப்ப தாக இருந்தது எனக் காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். இதே போன்ற அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் தேசிய விளையாட்டரங்கில் ‘காலாங் கர்ஜனை’ மீண்டும் ஒலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என நம்பலாம். தமது அணியினரின் செயல்பாடு கண்டு சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளர் யோஷிடாவும் பெருமிதம் கொண்டார்.
ஆசிய கண்டத்திற்கான தகுதிச் சுற்றின் இரண்டாம் சுற்றில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர், முதல் இரு ஆட்டங்களில் நான்கு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆயினும், சவூதி அரேபியா, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான இரு ஆட்டங்களில் தோற்றதால் இப்போது நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.
அடுத்ததாக, வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆட்டத்தில் சிங்கப்பூர், ஏமனை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது.