துபாய்: கிரிக்கெட் விளையாட்டில் சிங்கப்பூர் புத்தெழுச்சியுடன் விளையாடி, ஏறுமுகம் கண்டு வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியுடைய ஸிம்பாப்வே அணியைக் கடந்த மாதம் வீழ்த்தி அதிர்ச்சி அளித்த சிங்கப்பூர், நேற்றும் தரவரிசையில் தன்னைவிட பத்து இடங்கள் மேலே இருக்கும் ஸ்காட்லாந்தை வென்று முத்திரை பதித்தது.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. மொத்தம் 16 அணிகள் பங்குகொள்ளும் அத்தொடருக்கு பத்து அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.
எஞ்சியுள்ள ஆறு இடங்களைப் பிடிக்க 14 அணிகள் போட்டியிடுகின்றன. அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் துபாயில் நேற்று தொடங்கின.
பெர்முடா, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, பாப்புவா நியூ கினி, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் சிங்கப்பூர் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
முதல் போட்டியில் சிங்கப்பூர் நேற்று ஸ்காட்லாந்துடன் மோதியது. முதலில் பந்தடித்த சிங்கப்பூர் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சந்திரமோகன் 51 ஓட்டங்களையும் அரித்ரா தத்தா 32 ஓட்டங்களையும் விளாசினர்.
இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து முதல் விக்கெட்டுக்கு 70 ஓட்டங்களைக் குவித்தது. இருந்த போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி தடுமாறத் தொடங்கியது. கடைசி ஓவரில் எட்டு ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்த நிலையில் அந்த அணி மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, ஐந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இறுதியில் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்ததால் சிங்கப்பூர் அணி இரண்டு ஓட்டங்களில் வெற்றி பெற்றது. செல்லத்துரை விஜயகுமார் நான்கு ஓவர்களை வீசி 16 ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
அடுத்ததாக நாளை நடக்க உள்ள ஆட்டத்தில் பெர்முடாவுடன் சிங்கப்பூர் மோதவிருக்கிறது.