மும்பை: கிரிக்கெட் விளையாட்டில் 1970, 80களில் வெஸ்ட் இண்டீசும் 1990களில் ஆஸ்திரேலியாவும் அசைக்க முடியாத அணிகளாகத் திகழ்ந்து வந்ததைப் போல, இந்திய அணியும் அவ்விளையாட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார்.
அத்துடன், ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என்ற இந்திய இப்போதைய வேகப்பந்து வரிசை 1980, 90களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர்களை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக முன்னாள் வீரர்கள் பங்குபெறும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்கவிருக்கிறது.
அதில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா, பிரெட் லீ, ஜான்டி ரோட்ஸ், திலகரத்னே தில்ஷன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விளையாடவிருக்கின்றனர்.
அந்தத் தொடருக்கான அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றிருந்த லாரா, தற்போதைய இந்திய அணியையும் அதன் தலைவர் விராத் கோஹ்லியையும் வெகுவாகப் புகழ்ந்தார்.
“டோனி தலைமையில் இந்தியா சிறந்த அணியாக உருவெடுத்தது. அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு கோஹ்லியும் அணியைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார்,” என்றார் லாரா.
இந்திய அணி சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிய லாரா, 1970, 80களில் வெஸ்ட் இண்டீஸ், 1990களில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியதுபோல் கிரிக்கெட் உலகை இந்தியா ஆட்சி செலுத்தும் என்றும் அவ்விளையாட்டில் இந்தியா தற்போது முன்னணி நாடாகத் திகழ்கிறது என்றும் பாராட்டினார்.
ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இப்போது தடுமாறி வருவது பற்றிக் கேட்டதற்கு, ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கைரன் பொல்லார்டை நியமித்திருப்பதன்மூலம் அந்த அணி சரியான திசையில் அடியெடுத்து வைத்துள்ளதாக லாரா குறிப்பிட்டார்.