துபாய்: ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றில் நெதர்லாந்து, பாப்புவா நியூ கினி, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமான் ஆகிய அணிகள் முதல் ஆறு இடங்களைப் பிடித்து போட்டிக்குத் தகுதி பெற்றன.
ஏழாவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான அட்டவணையை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நேற்று வெளியிட்டது. இதன்படி ‘ஏ’ பிரிவில் இலங்கை, பாப்புவா நியூ கினி, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் பங்ளாதேஷ், நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெறுகின்றன.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வோர் அணியும் அவற்றின் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நடப்பு வெற்றியாளர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் இடம்பெறும்.
மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் இடம்பெறும்.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை அடுத்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பெர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
சூப்பர் 12 சுற்றிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி மெல்பர்னில் நடைபெறும்.