இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய சௌரவ் கங்குலி, தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான பின்னும் அதைத் தொடர்கிறார் என்பது அவ்வணியின் முன்னாள் சகாப்தம் சுனில் கவாஸ்கரின் (படம்) கருத்து.
இம்மாதம் 22ஆம் தேதி கோல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் மோதவுள்ள டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவிருக்கிறது. பகலிரவு ஆட்டத்தில் அவ்விரு அணிகளும் ஆடவிருப்பது முதன்முறை.
இளஞ்சிவப்பு வண்ணப் பந்துடன் பகலிரவு ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுவது சாத்தியமா என ஐயம் எழுந்த நிலையில், மூன்றே வினாடிகளில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியை ஒத்துக்கொள்ளச் செய்தார் சௌரவ் கங்குலி.
“கிரிக்கெட் வீரர் ஒருவர் வாரியத்தின் தலைவராக இருப்பது, பல உறுதியான முடிவுகளை எடுக்க உதவும். அத்துடன், அந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் வேகமாக நடக்கும்,’ என்றார் கவாஸ்கர்.
அந்த வகையில், பகலிரவுப் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டாத இரு அணிகளை அதற்கு இணங்கச் செய்ததன் மூலம் கங்குலி பிசிசிஐ தலைவரானதன் உடனடித் தாக்கமாகத் தான் கருதுவதாக கவாஸ்கர் குறிப்பிட்டார். அண்மையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த கவாஸ்கர், ஷங்ரிலா ஹோட்டலில் ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது இவ்வாறு சொன்னார்.