லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் பட்டியலின் முதல் இரு இடங்களை வகிக்கும் லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுக்கள் பொருதுகின்றன.
லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல், மேன்சிட்டியைவிட ஆறு புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது. இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் கூடுமா, குறையுமா அல்லது அப்படியே இருக்குமா என்பதை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டம் தீர்மானிக்கும்.
இந்நிலையில், தனது சொந்த அரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு லீக் வெற்றியாளரான மேன்சிட்டியை வீழ்த்த வேண்டுமெனில் லிவர்பூல் வீரர் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த ஆட்டத்
திறனை வெளிப்படுத்த வேண்டும் என அக்குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பருவத்தின் இறுதியில் லிவர்பூலைவிட வெறும் ஒரு புள்ளி கூடுதலாக பெற்ற மேன்சிட்டி லீக் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த பருவம் இவ்விரு குழுக்கள் பொருதிய இரு ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றில் மேன்சிட்டி சமநிலை கண்டது.
நடப்பு பருவத்தில் இதுவரை தான் விளையாடிய 11 ஆட்டங்களில் எதிலும் தோல்வியுறாத லிவர்பூல், இந்த ஆட்டத்தில் சிட்டியைத் தோற்கடித்தால் அக்குழுவைவிட ஒன்பது புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தை வலுவாக்கிக்கொள்ள முடியும். எனினும், வெற்றி சாத்தியமாக வேண்டுமெனில் அனைத்தும் திட்டமிட்டதுபோல நிறைவேற வேண்டும் எனக் கூறினார்.
“கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிமியர் லீக்கில் அசைக்க முடியாத சக்தியாக மேன்சிட்டி உருவெடுத்துள்ளது. அந்நிலையைத் தகர்த்தெறிய நாங்கள் பெரிதும் முயன்று வருகிறோம்.
“சிட்டியுடன் நாங்கள் விளையாடிய கடைசி மூன்று ஆட்டங்களில் ஒன்றில் சமன் செய்து, மற்ற இரண்டிலும் தோல்வியைத் தழுவினோம். ஆனால், அதையடுத்து எமது வீரர்கள் மேம்பாடு கண்டு வருகின்றனர்,” என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கிளோப் கூறினார்.
முக்கிய லிவர்பூல் வீரர்களில் இருவரான ஜோர்டன் ஹெண்டர்சனும் வெர்ஜில் வேன் டைக்கும் குழுவில் இடம்பெறுவர் என அவர் தெரிவித்தார்.
லிவர்பூல் தனது சொந்த அரங்கில் கடைசியாக விளையாடிய 45 ஆட்டங்களில் தோல்வியுறவில்லை. இந்த ஆட்டத்திலும் லிவர்பூல் வீரர்களுக்கு பக்கபலமாக ரசிகர்கள் இருப்பார்கள் என கிளோப் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்றைப் புரட்டிப்போடும் முனைப்பில் மேன்சிட்டி
லிவர்பூல் கோட்டையில் சிட்டி கடைசியாக 2003ஆம் ஆண்டு மே மாதம் வென்றிருந்தது. இந்நிலையில், வரலாற்றைத் திருப்பிப் போடும் முனைப்பில் உள்ள சிட்டி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆன்ஃபீல்டில் வெல்ல திட்டம் தீட்டி வருவதாக பிரேசில் வீரர் ஃபெர்னாண்டினோ கூறினார்.
“வாழ்க்கையில் எதிலும் முதன்முறை என்பது உண்டு. ஆன்ஃபீல்டில் நீண்டகாலத்திற்கு பிறகு முதன்முறையாக வெல்ல வேண்டும் என விழைகிறோம்,” என்றார் அவர்.
இதற்கிடையே, தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மேன்சிட்டி கோல்காப்பாளர் எடர்சன் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என நிர்வாகி பெப் கார்டியோலா நேற்று முன்தினம் தெரிவித்தார். சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த புதன்கிழமை அட்லாண்டா குழுவுக்கு எதிரான ஆட்டத்தின் நடுப்பகுதியில் எடர்சனுக்கு காயம் ஏற்பட்டதில் அவர் வெளியேறினார்.
அவ–ருக்–குப் பதி–லாக கோல்–காப்–பா–ளர் இடத்தை கிளா–டியோ பிராவோ நிரப்–பு–வார் என கார்–டி–யோலா கூறி–னார்.