கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் கோல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) ஆட்டத்தில் கோல்கத்தா குழுவும் ஜம்ஷெட்பூர் குழுவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு குழுக்களும் தாக்குதலில் ஈடுபட்டு கோல் அடிக்க முயன்றன.
ஆனாலும் இருதரப்பினராலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 57வது, 71வது நிமிடங்களில் கோல்கத்தா ஆட்டக்காரர் ராய் கிருஷ்ணா இரு கோல்கள் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் ஜம்ஷெட்பூர் அணி வீரர் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டும் எஞ்சியிருந்தபோது கோல்கத்தாவின் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், கோல்கத்தா அணி 3-1 எனும் கோல் கணக்கில் ஜம்ஷெட்பூர் அணியை தோற்கடித்தது. இதன்மூலம் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த கோல்கத்தா அணி, லீக் பட்டியலின் முதலிடத்துக்கு முன்னேறியது.