கொழும்பு: கிரிக்கெட் போட்டி முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிப்பதைக் குற்றமாக கருதும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது தெற்காசியாவிலேயே இதுவே முதன்முறை.
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அமைச்சர் பதவி வகிக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிப்பதோடு, மோசடி, சட்டவிரோதமாக பந்தயம் பிடித்தல் என்பவற்றைத் தடுக்கவும் அது குறித்த விசாரணை நடத்துவதற்காகவும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு லட்ச இலங்கை ரூபாய் (S$1,508) அபராதமும் மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
மேலும் பந்தயம் பிடிப்பது, அதை ஊக்குவிப்பது, அதற்கு உடந்தையாக இருப்பது ஆகிய குற்றங்
களுக்கு ஐந்து லட்ச ரூபாய் (S$3,770) அபராதம் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இலங்கை கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.