கோல்கத்தா: இந்தியா, பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிகள் முதன்முதலாக பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் மோதவிருக்கின்றன. இம்மாதம் 22ஆம் தேதி கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் அந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் மணியடித்து அந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க இருக்கின்றனர்.
“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியை முடிந்த அளவிற்கு எல்லா வழிகளிலும் மறக்க முடியாதபடி ஆக்க முயல்வோம்,” என்றார் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் அவிஷேக் டால்மியா.
இதனிடையே, பகலிரவுப் போட்டி நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பிற்பகல் 1 மணிக்கு ஆட்டம் தொடங்கி, இரவு 8 மணிக்கு முடியும்.