லண்டன்: இந்த ஆண்டின் இறுதி டென்னிஸ் தொடரான ‘ஏடிபி ஃபைனல்ஸ்’ தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டோமினிக் தியம் தகுதிபெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் வீரர்கள் இரு பிரிவுகளாக மோதி வருகின்றனர்.
‘ஆண்ட்ரே அகஸ்ஸி’ பிரிவில் ரஃபாயல் நடால், டேனியல் மெட்வடேவ், ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், அலெக்சாண்டர் ஸ்வரெவ் ஆகியோரும் ‘பியோன் போர்க்’ பிரிவில் நோவாக் ஜோக்கோவிச், ரோஜர் ஃபெடரர், டோமினிக் தியம், மட்டயோ பெரெட்டினி ஆகியோரும் உள்ளனர்.
இந்நிலையில், ஜோக்கோவிச்-தியம் இடையே நேற்று முன்தினம் நடந்த ஆட்டமே இந்தத் தொடரின் ஆகச் சிறந்த ஆட்டமாக வர்ணிக்கப்படுகிறது.
தரவரிசையில் ஐந்தாம் நிலையில் இருக்கும் தியம், ஐந்து முறை வெற்றியாளரான செர்பியாவின் ஜோக்கோவிச்சை 6-7, 6-3, 7-6 என்ற செட்களில் போராடித் தோற்கடித்தார்.
‘பியோன் போர்க்’ பிரிவில் இருந்து பெரெட்டினி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், அப்பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொருவர் யார் என்பதை முடிவுசெய்ய, ஜோக்கோவிச்சும் ஃபெடரரும் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு மோதவிருந்தனர்.