பிரிஸ்டினா: உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று போட்டியின் போது இருந்ததைவிட இங்கிலாந்து அணி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி கேரத் செளத்கேட்.
கொசோவா அணியை வீழ்த்தி யூரோ 2020 காற்பந்துப் போட்டியில் தங்களுக்கான இடத்தை இங்கிலாந்து அணி உறுதி செய்த பிறகு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
“இங்கிலாந்து அணியிடம் தன்னம்பிக்கை உள்ளது என்ற அவர், அது கண்கூடாகத் தெரிவதாகக் கூறினார்.
“ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அணியினரிடையே வந்துள்ளது.
“ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு அவர்கள் விளையாடவில்லை.
“உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றின்போது இருந்ததைக் காட்டிலும் நாங்கள் இப்போது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்,” என்றார்.
நேற்றைய ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் ஹேரி விங்க்ஸ் 32வது நிமிடத்தில் துவங்கி வைத்த கோல் கணக்கைத் தொடர்ந்து ஹேரி கேன், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், மேசன் மௌண்ட் ஆகியோரும் தலா ஒரு கோல் போட்டதால் 4-0 என ஆட்டம் இங்கிலாந்து வசமானது.
மேலும் இத்தொடரில் இங்கிலாந்து விளையாடிய எட்டு தகுதிச் சுற்று ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கை 37 ஆனது.
இது உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றின் 10 ஆட்டங்களில் போட்ட 18 கோல்களைவிட இருமடங்காகும்.
இப்பிரிவில் பல்கேரியாவை 1-0 என வீழ்த்திய செக் குடியரசும் யூரோ காற்பந்துக்கு நேரடியாக தகுதி பெற்றது.
‘பி’ பிரிவில் லக்ஸ்ம்பர்க் அணியை வீழ்த்தினால்தான் யூரோ 2020 தொடருக்கு நேரடியாக தகுதி பெறமுடியும் என்ற நெருக்கடியில் விளையாடிய போர்ச்சுகல் அணி 2-0 என வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ரொனால்டோ போட்ட ஒரு கோல், போர்ச்சுகல் அணிக்காக அவர் போட்ட 99வது கோலாகும்.
“109 கோல்கள் போட்டு உலக சாதனை படைத்த அலி டெய்யின் சாதனையை முறியடிப்பேன்,” என்று உறுதிபட கூறினார் ரொனால்டோ.
அல்பேனியாவை இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி யூரோ காற்பந்திற்கு தகுதி பெற்றது உலக வெற்றியாளரான பிரான்ஸ் அணி.
பிரான்ஸ் இடம்பெற்றுள்ள ஹெச் பிரிவின் இன்னோர் ஆட்டத்தில் அன்டோராவை 2-0 என வென்றது துருக்கி.