மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் டெஸ்ட் நட்சத்திரம் மயங்க் அகர்வாலுக்கான வாய்ப்பு குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன.
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதையடுத்து இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் சென்று 20 ஓவர், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதனையடுத்து நியூசிலாந்துக்கும் செல்லவுள்ளது இந்திய அணி.
மேலும் ஷிகர் தவானின் ஆட்டம் நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வரும் நிலையில் மயங்க் அகர்வால் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்கின்றனர் ரசிகர்கள்.
ஷிகர் தவான் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கிண்ணப் போட்டியில் கூட ஓட்டம் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்து தொடரில் கவனம் செலுத்தும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்த இடத்தில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக வாய்ப்பளிக்கப்பட்டு, மயங்க் அகர்வால் தயாராகிவிட்டால் இந்திய அணி வலுவாக திகழும்.
பங்ளாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 28 பவுண்டரி, எட்டு சிக்சர் உட்பட 243 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.