கோல்கத்தா: வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து தாம் கனவு காண்பதாக இந்திய அணித் துணைத் தலைவர் அஜிங்கிய ரகானே தெரிவித்துள்ளார்.
இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கோல்கத்தாவில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, ரகானே ஆகியோர் நேற்று கோல்கத்தா சென்றடைந்தனர்.
இதுதொடர்பாக ரகானே வெளியிட்டுள்ள பதிவில், “ஏற்கெனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் போட்டி குறித்து கனவு காண தொடங்கிவிட்டேன்,” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்ளாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 300 புள்ளிகள் பெற்று மற்ற அணிகள் எட்டமுடியாத உச்சத்தில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பங்ளாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், பந்தைத் தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மைதானத்தில் நிலவும் ஈரப்பதம் இப்போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இந்தப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.