லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் புதிய நிர்வாகியாக ஜோசே மொரின்யோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் ஸ்பர்சின் நிர்வாகியாக இருந்த மொரிசியோ பொக்கெட்டினோ நேற்று முன்தினம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஸ்பர்சின் நிர்வாகியாக பொக்கெட்டினோ கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவி வகித்தார்.
ஆறு மாதங்களுக்கு முன் அர்ஜெண்டினியரான பொக்கெட்டினோவின் தலைமையின்கீழ் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பர்ஸ் தகுதி பெற்றது. ஆனால் இந்தப் பருவத்தில் ஸ்பர்ஸ் சோபிக்காததால் வேறு வழியின்றி பொக்கெட்டினோவைப் பதவி நீக்கம் செய்துள்ளதாக ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகம் அறிவித்தது.
12 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் ஸ்பர்ஸ் வெறும் 14 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.
பொக்கெட்டினோவுக்குப் பதிலாக நிர்வாகி பொறுப்பை ஏற்கும் போர்ச்சுகீசியரான 56 வயது மொரின்யோ கடந்த டிசம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு அவருக்கு இப்போதுதான் நிர்வாகி பதவி கிடைத்துள்ளது.
இந்நிலையில், பொக்கெட்டினோ திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“ஸ்பர்சின் நிலையை மேம்படுத்த அவருக்குக் கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் இறுதி வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஸ்பர்ஸ் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. உண்மையாகப் பார்க்கப்போனால் முதல் ஆறு இடங்களில் வரும் தரம் கொண்ட குழுவாக ஸ்பர்ஸ் உள்ளது.
ஆனால் அக்குழுவை எப்படியோ முதல் நான்கு இடங்களுக்குக் கொண்டு சென்றவர் பொக்கெட்டினோ. அவரது வழிகாட்டுதலின் பேரில் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்திற்கு ஸ்பர்ஸ் தகுதி பெற்றது,” என்று லிவர்பூலின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் ஜேமி கெரகர் தெரிவித்தார்.
ஸ்பர்சின் மத்தியத்திடல் ஆட்டக்காரர் டெலி அலி பொக்கெட்டினோவுக்கு டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.
“அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். எனக்கு செய்த உதவிகளுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்,” என்று டெலி அலி தெரிவித்தார்.
ஆனால் இப்பருவத்தில் ஸ்பர்சின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் பொக்கெட்டினோ பதவி நீக்கம் செய்யப்பட்டதில் ஆச்சரியம் இல்லை என்று ஸ்பர்சின் முன்னாள் நிர்வாகி ஹேரி ரெட்னேப் கூறினார்.