கோல்கத்தா: கிரிக்கெட் விளையாட்டில் 20 ஓவர் போட்டிகள் வந்தபின் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறைந்ததையடுத்து, பகலிரவுப் போட்டியாக நடத்தினால் பணிக்குச் செல்வோரும் மாலை அல்லது இரவில் போட்டியைக் காண வருவார்கள் எனக் கருதினார் இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் கங்குலி.
இந்நிலையில் பிசிசிஐ தலைவரானதுமே முதல் பணியாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியத்துடன் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்.
கங்குலியின் தீவிர முயற்சியால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சிங்கப்பூர் நேரப்படி இன்று பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
மேலும் இப்போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது.
சிவப்பு நிற பந்துகளைவிட தெளிவாக தெரிவதால் பகலிரவு போட்டியில் முக்கிய மாற்றமாக இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இளஞ்சிவப்பு பந்தைப் பொறுத்தவரை பந்தடிப்பு சற்று கடினமாக இருக்கும் என்று கூறப்
படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் இது கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியை பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தொடங்கி வைக்கவுள்ளனர்.
இதற்கிடையே, முகமது ஷமி எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் என்று விக்கெட் காப்பாளர் ரித்திமான் சகா கூறியுள்ளார்.
“எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு தற்போது இருக்கும் உத்வேகத்தில், இளஞ்சிவப்பு பந்து என்ன எந்த பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
“குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பந்துவீச்சாளராக உருவெடுக்கக்கூடியவர். அவரது வேகமும் பந்தை ரிவர்ஸ்விங் செய்யும் திறமையுமே அதற்குச் சான்று.
“ஆடுகளத்தில் இளஞ்சிவப்பு பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை.
“ஆனால் எங்களது பந்துவீச்சாளர்களின் உத்வேகம், ஆட்டத்திறனுக்கு முன் பந்தின் நிறம் ஒரு பிரச்சினையே இல்லை.
“வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக அமையும்,” என்றார்.
2015ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த உலகின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வென்றது. இதுவரை மொத்தம் 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.