முதல் பகலிரவு டெஸ்ட்: சதமடித்து அசத்தினார் விராத் கோஹ்லி

முதல் பகலிரவு டெஸ்ட்: சதமடித்து அசத்தினார் விராத் கோஹ்லி

1 mins read
b4ddf331-d013-46f1-9ca9-81e505ba6c2b
சதமடித்ததை உற்சாகத்துடன் கொண்டாடும் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி -

கோல்கத்தா: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார்.

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் எதிர்பார்த்ததைப்போல அரை சதம்கூட அடிக்கவில்லை. அவர்களுக்கு அடுத்து களமிறங்கிய செதெஷ்வர் புஜாரா அரை சதமடித்து வெளியேறினார்.

அவரை அடுத்து விளையாடிய நடுவரிசை பந்தடிப்பாளர்களான அஜிங்யா ரகானேவும் கோஹ்லியும் நிதானமாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர். ரகானே அரை சதமடித்து 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோஹ்லி சதமடித்து அசத்தினார். பின்னர் 136 ஓட்டங்களுடன் அவர் வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 27வது சதம் இதுவாகும்.

முன்னதாக, அணித் தலைவராக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 5,000 ஓட்டங்ளைத் தாண்டிய வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றிருந்தார். இப்போட்டியில் இவர் 32 ஓட்டங்களைத் தொட்டபோது, இந்தச் சாதனையைப் படைத்தார். ஐந்தாயிரம் ஓட்டங்களைக் கடக்க இவருக்கு 86 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது.

இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் 5,000 ஓட்டங்களைக் கடந்து முதல் இடத்தில் இருந்தார்.

தற்போது அச்சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிளைவ் லாய்டு 106 இன்னிங்சிலும், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 110 இன்னிங்சிலும் 5,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.