லண்டன்: 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஜோசெ மொரின்யோ சும்மா இருந்துவிடவில்லை.
பல நேர்காணல்கள், ஸ்கை தொலைக்காட்சிக்கு காற்பந்து விமர்சனங்கள் என தம்மை சுறு சுறுப்பாகவே வைத்துக்ெகாண்டார்.
ஆனால், நேற்று முன்தினம் வெஸ்ட்ஹேம் குழுவை எதிர்த்து தான் புதிதாக நிர்வாகப் பொறுப்பேற்றுக் கொண்ட டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 3-2 என வெற்றி பெற்ற பின்தான் இத்தனை காலம் தான் வெட்டியாக இருந்து இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததாம்.
ஆனால், வெஸ்ட்ஹேம் குழுவுக்கு எதிராக சோன் ஹியுங் மின் முதல் கோல் போட்டு வெற்றிக்கு அடிகோலியவுடன் 56 வயது மொரின்யோ தமது பழைய நிலைக்கு திரும்பினார். முகத்தில் புன்னகை தவழ, “எனக்குரிய இடத்திற்கு நான் திரும்பி வந்து விட்டேன்.
“இதுதான் எனது இயற்கையான வசிப்பிடம்,” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
“நான் உணர்ச்சி வயப்பட்டேன் என்கிறீர்களா? இல்லை.
“நான் ஆட்டம் ஆரம்பிக்குமுன் பதற்றத்துடன் இருந்தேன் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை.
“எனக்கு இது உண்மையிலேயே மிகவும் பிடித்திருந்தது”, என்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
ஜோசெ மொின்யோ நிர்வாகியாக பணியாற்றிய இடங்களிலெல்லாம் அவரது குழு முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததே இல்லை என்று கூறும் பிபிசி செய்தித் தகவல், ஸ்பர்ஸ் குழுவுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் ஆட்டத்திலும் அந்த சாதனையை அவர் கட்டிக் காத்ததாக புகழாரம் சூட்டியது.
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஸ்பர்ஸ் அணி சோன் ஹியுங் மின், லுக்கஸ் மோரா, ஆகியோர் இரண்டு கோல்கள் போட, இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி நான்கே நிமிடங்களில் ஹேரி கேன் மூன்றாவது கோலையும் போட்டு மொரின்யோவுக்கு வெற்றி தேடித் தந்தனர். பின்னர், வெஸ்ட்ஹேம் அணி இரண்டு கோல்கள் போட்டாலும் ஆட்டத்தின் முடிவை அந்த கோல்கள் பாதிக்கவில்லை. அத்துடன், இல்லாமல் இதுவரை ஆடிய கடைசி ஏழு ஆட்டங்களில் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளதால் வெஸ்ட்ஹேம் நிர்வாகி பெலகிரினிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.