கோல்கத்தா: இந்தியா- பங்ளாதேஷ் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கோல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடை பெற்றது.
பூவா, தலையா போட்டுப் பார்த்ததில் வென்று முதலில் பந்தடிப்பை தேர்வு செய்த பங்ளாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் விராத் கோஹ்லியின் (136ஓட்டங்கள்) அபார சதம் , புஜாரா (55 ஓட்டங்கள்), ரகானே (51 ஓட்டங்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.
இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பங்ளாதேஷைவிட 246 ஓட்டங் கள் முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து, பங்ளாதேஷ் 2வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர். பங்ளாதேஷ் அணியில் முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 74 ஓட்டங்களில் ஆட்ட மிழந்தார். 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயம் காரணமாக வெளியேறினார்.
இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி பங்ளாதேஷ் வீரர்களை ஆட்டமிழக்க வைத்தார். இறுதியில், பங்ளாதேஷ் அணி 41.1 ஓவரில் 195ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.