மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக்கின் ‘ஏ’ பிரிவில் ரியால் மட்ரிட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பிஎஸ்ஜி என்றழைக்கப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சமநிலை கண்டது. 2-0 என பின்தங்கிய நிலையில் கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதன் மூலம் பிஎஸ்ஜியின் வெற்றியை மட்ரிட் தடுத்தது.
இருப்பினும் இவ்விரு அணிகளும் ‘ஏ’ பிரிவிலிருந்து ஏற்கெனவே முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுவிட்டன.
கரிம் பென்சிமா 17 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் மட்ரிட் நெருக்கடி இன்றி முன்னிலை பெற்றது.
பெடரிகோ வல்வார்டோ உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வந்தபோது பென்சிமா குறுக்கிட்டு அந்தப் பந்தை வலைக்குள் புகுத்தினார்.
முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வர இரண்டு நிமிடங்கள் இருந்தபோது மட்ரிட் கோல்காப்பாளர் திபோட் கோர்டோயிசுக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்தார். ஆயினும் காணொளி நடுவரின் உதவியால் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது.
79வது நிமிடத்தில் கோல் கம்பத்திற்கு சற்று தூரத்தில் நின்றிருந்த பென்சிமா தலையால் முட்டி மற்றொரு கோலைப் புகுத்தியதும் மட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது.
எனினும் எதிரணி பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி கிலியன் எம்பாப்பே 81வது நிமிடத்திலும் அடுத்த இரு நிமிடங்களில் பப்லோ சரபியாவும் அடித்த கோல்கள் மூலம் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது பிஎஸ்ஜி.
பிரான்ஸ் சாம்பியனான அந்த அணி இந்த முடிவின் மூலம் ‘ஏ’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.