சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற லிவர்பூல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இத்தாலியின் நெப்போலியுடனான ஆட்டத்தில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.
ஆனால் அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்தது. இதனால் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் அடுத்த சுற்றுக்கு முன்னேற அடுத்த ஆட்டத்தில் குறைந்தது ஒரு புள்ளியாவது பெற வேண்டும். லிவர்பூல் அதன் அடுத்த ஆட்டத்தில் சால்ஸ்பர்க் குழுவுடன்மோதுகிறது. இந்த ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டம் லிவர்பூலின் அன்பீல்ட் அரங்கில் நடைபெற்றது. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் நெப்போலியின் மார்டென்ஸ் கோல் போட்டார்.
ஆனால் தோல்வியின் பிடியில் சிக்கக்கூடாது என்ற முனைப்புடன் இருந்த லிவர்பூல் ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
லோவ்ரன் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட இரு குழுக்களும் தலா ஒரு புள்ளி பெற்றன. இந்த ஆட்ட முடிவின் விளைவாக பட்டியலில் லிவர்பூலைவிட ஒரு புள்ளி குறைவாக நெப்போலி பெற்றுள்ளது.
ஆனால் அக்குழு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறாத கெங்க் குழுவை இன்னும் இரண்டு வாரங்களில் நெப்போலி சந்திக்கிறது.
மற்றோர் ஆட்டத்தில் செல்சியும் வெலென்சியாவும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன. செல்சி 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஆட்டம் முடியும் கட்டத்தில் டேனியல் வாஸ் மூலம் வெலென்சியா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது.
இதனால் செல்சி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பது குறித்து அறிய அடுத்த ஆட்டம் வரை பொறுத்திருக்க வேணடும்.
இந்நிலையில், ஸ்பானிய காற்பந்து லீக் ஜாம்பவான் பார்சிலோனா காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொருசியா டோர்ட்மன் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் அது தோற்கடித்தது.
இந்த ஆட்டம் பார்சிலோனாவுக்காக நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி களமிறங்கிய 700வது ஆட்டம். இதில் அவர் கோல் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity