புதுடெல்லி: கோல்கத்தாவில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி செய்தியாளர்
களிடம் பேசினார்.
“மன உறுதியை சோதிக்கும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட கற்றுக்கொண்டோம். கங்குலி அணித் தலைவராக இருந்த போதுதான் இது தொடங்கியது. நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்கிறோம்,” என்றார்.
கோஹ்லியின் இந்த கருத்துக்கு முன்னாள் அணித் தலைவரும் தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் பதிலடி கொடுத்து இருந்தார்.
“கங்குலி அணித் தலைவராக இருந்த ஆண்டுகளில்தான் இந்தியா வெற்றி பெற தொடங்கியதாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.
“ஆனால் இந்திய அணி 1970 மற்றும் 1980களில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அப்போது கோஹ்லி இன்னும் பிறந்திருக்க வில்லை. 2000 ஆண்டுக்குப்
பிறகுதான் கிரிக்கெட் தொடங்கியதாக பலர் இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
“ஆனால் இந்திய அணி 1970களில் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறத் தொடங்கியது. 1986ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றது. அதைத் தவிர பல
தொடர்களிலும் சமநிலை கண்டது,” என்று கவாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில், கோஹ்லிக்கு ஆதரவு தெரிவித்தும் கவாஸ்கருக்குப் பதிலடி கொடுத்தும் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.
“கோஹ்லி கூறியிருப்பது
அவரது தனிப்பட்ட கருத்து. அதே நேரத்தில் கங்குலி தலைமையில்தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற தொடங்கியது என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை.
“கவாஸ்கர் அல்லது கபில்தேவ் அல்லது மற்ற அணித் தலைவர்களின் காலத்தில் இந்திய அணி எப்போதுமே சொந்த மண்ணில்தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கங்குலி அணித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தான் வெளிநாடுகளில் வெற்றி பெற தொடங்கினோம்,” என்றார் காம்பீர்.