மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கப்பூர் காற்பந்துக் குழு மோசமாக விளையாடி வருவதற்கு அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது (படம்) மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்திடம் 3-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் குழு வீழ்ந்தது. இதனால் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் சிங்கப்பூர் குழுவின் கனவு அநேகமாகக் கலைந்தது.
சிங்கப்பூர் குழு இதுவரை தான் விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களில் எதிலும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. லாவோஸுக்கு எதிரான ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. அதற்கு அடுத்து இந்தோனீசியாவுடனான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றது.
மூன்று ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ள சிங்கப்பூர், ஆறு குழுக்கள் இடம்பெறும் ‘பி’ பிரிவு பட்டியலில் ஐந்தாவது நிலையில் உள்ளது. அதற்குக் கீழ் கடைசி நிலையில் புருணை உள்ளது.
‘பி’ பிரிவில் சிங்கப்பூர் குழுவுக்கு இன்னும் இரு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இப்பிரிவில் முன்னிலை வகிக்கும் வியட்னாமை இன்று சிங்கப்பூர் எதிர்கொள்கிறது. தான் விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களில் அனைத்தையும் வென்றுள்ள வியட்னாமை வெல்வது சிங்கப்பூருக்கு எட்டாக்கனியாக இருக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நாளை மறுதினம் நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் புருணையுடன் அது மோதவுள்ளது.
இந்தோனீசியாவுடனான ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஃபாண்டி கூறியிருந்த சர்ச்சைக்குரிய கருத்து பலரை அதிருப்தி அடைய வைத்தது.
“சிங்கப்பூரில் நமக்கு போதுமான எண்ணிக்கையில் திறன் கொண்ட காற்பந்து விளையாட்டாளர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
“நமது விளையாட்டாளர்கள் பெரும்பாலானோர் பகுதி நேரமாக விளையாடுகின்றனர். ஒரு சிலர் மாணவர்களாகவும் மற்ற சிலர் தேசிய சேவையாளர்களாகவும் உள்ளனர்,” என்று ஃபாண்டி கூறியிருந்தார்.
தாய்லாந்துடனான ஆட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய அவர், “சிங்கப்பூர் ரசிகர்கள் என் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். இம்முறை சிங்கப்பூருக்கு பதக்கம் வென்று தர முடியாமல் போய்விட்டது. அதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன்.
“எனினும், எனது வீரர்கள் மீது எந்தவித தவறும் கிடையாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். சிரமமான நேரங்களில் அவர்கள் கடுமையாக போராடியுள்ளனர்,” என்று கூறினார்.
அண்டை நாட்டுக் காற்பந்துக் குழுக்கள் வலுவாக இருப்பதை ஒப்புக்கொண்ட ஃபாண்டி, 57, சிங்கப்பூர் முன்னேறுவதற்கு நீண்ட பாதை இருப்பதாகக் கூறினார்.
“நமது விளையாட்டை மேம்படுத்த தற்காப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, ஸ்போர்ட் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர்.