மான்செஸ்டர்: நேற்று முன்தினம் பின்னிரவில் தனது சொந்த மைதானத்தில் நடைெபற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லாவை எதிர்கொண்ட மேன்யூ மீண்டும் சமநிலை கண்டுள்ளது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே வில்லாவின் கிரீலிஷ் என்பவர் தமக்குக் கிடைத்த பந்தை மேன்யூ கோல்வலையின் மேல் பகுதியில் உதைத்து தமது குழுவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
பின்னர் முதல் பாதி முடிய சில நிமிடங்கள் உள்ள நிலையில் மேன்யூ ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 64ஆம் நிமிடத்தில் முதல் கோலைப் போல் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய மான்செஸ்டர் யுனைடெட் இம்முறை தற்காப்பு ஆட்டக்காரர் லிண்டாலாஃப் மூலம் மேலும் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றது.
ஆனால், அந்த நிலை இரண்டு நிமிடங்கள்தான் நீடித்தது. ஆஸ்டன் வில்லாவின் மேட் டார்கெட், மேன்யூ வீரர்கள் அனைவரும் அவர் ‘ஆஃப்சைட்’ நிலையில் இருப்பதாக எண்ணி கவனமின்றி வாளாவிருக்க ஓசையில்லாமல் கோல் போட்டார்.
அதன்பின் யுனைடெட் குழு எவ்வளவோ முக்கி முனகினாலும் அதன் வீரர்களால் கோல் போட்டு வெற்றி பெற முடியாமல் ஆட்டம் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.
இனி இந்த வாரம் புதன்கிழமை மொரின்யோவின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவையும் அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மான்செஸ்டர் சிட்டி குழுவையும் எதிர்கொள்ளும் யுனைடெட் குழு மீது அதன் ரசிகர்கள் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
வில்லாவுடனான ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஹேரி மெக்குவயர், “ஒரு குழுவாக நாங்கள் முன்னேறி வருகிறோம்.
“ஆனால், இன்னும் சிறப்பாக முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
“நாங்கள் மிக சிரமப்பட்டு விளையாடியும் வில்லாவை வீழ்த்த முடியவில்லை. ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராக இன்னும் நன்றாக விளையாடி நிலைமையை சரிசெய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
“வில்லா போட்ட முதல் கோலுக்குப் பிறகு, நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்களுக்கு அது ஓர் அடி.
“அதன்பின், எங்களது ஆட்டத்தில் ஒருவித பதற்றம் தென்பட்டது.
“இரண்டாவது கோல் போட்டு முன்னிலை பெற்ற உடனேயே வில்லாவிடம் மீண்டும் ஒரு கோல் விட்டுக் கொடுத்தது, பெருத்த ஏமாற்றம்” என்றார்.
வெற்றிப் பாதையில் லெஸ்டர்
மற்றோர் ஆட்டத்தில் முதலில் ஒரு கோல் விட்டுக்கொடுத்து பின்னடைவு கண்ட லெஸ்டர் சிட்டி குழு, பின்னர் பதிலுக்கு இரண்டு கோல்கள் போட்டு 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் எவர்ட்டன் குழுவை வென்றது.
கடைசியாக தான் விளையாடிய ஆறு ஆட்டங்களில் லெஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் எதிரொலியாக, லெஸ்டரின் நிர்வாகியாக இந்தப் பருவம் நியமிக்கப்பட்ட பிரண்டன் ரோஜர்ஸுக்கு ஆர்சனல் குழுவிலிருந்து அதற்குப் பொறுப்பேற்குமாறு அழைப்பு வரலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
நிர்வாகி புதியவர் என்றாலும் குழுவின் செயல்பாடு பழையதே
இதற்கிடையே, யுனைடெட்டைப் போலவே மற்றுமொரு பெயர் பெற்ற குழுவான ஆர்சனல் புதிய நிர்வாகியான லுங்பர்க்கின் பொறுப்பில் நார்விச் குழுவை எதிர்கொண்டது.
எனினும், அதன் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை என்று கூறப்படுவதற்கு ஏற்ப அது நார்விச் குழுவுடன் 2-2 என சமநிலை கண்டது.
இதிலும் அது மான்செஸ்டர் யுனைடெட் குழுவையே பின்பற்றியது என்று கூறத் ேதான்றுவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.