மணிலா: தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் நேற்று முன்தினம் வியட்னாமை எதிர்கொண்ட சிங்கப்பூர் காற்பந்துக் குழு 0-1 என தோல்வியைத் தழுவியது.
எனினும், ஆட்டம் தொடங்கும் முன்பே தாய்லாந்து லாவோசை 2-0 என்று வெற்றி கொண்டதை அடுத்து பட்டியலின் இரண்டாம் நிலையைப் பிடித்து தகுதி பெற்றுவிட்டதால், பட்டியலில் ஐந்தாம் நிலையில் இருக்கும் சிங்கப்பூர் வியட்னாமை சந்திக்கும் முன்னரே போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள போதிலும் நேற்றைய ஆட்டம் தமக்கு திருப்தி அளிப்பதாக சிங்கப்பூர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது விளக்கினார்.
“ஆட்டத்தின் முடிவு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றபோதும் வீரர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
“தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தபோதிலும், போட்டியில் சிறந்த குழுவுக்கு எதிராக நாங்கள் மிக நன்றாக விளையாடிய ஆட்டம் இது.
“நாங்கள் கடுமையாகப் போராடினோம், அத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் குழுவினரிடம் இருந்தது.
“சிறந்த உத்திகளை வகுத்து நாங்கள் விளையாடினோம். எங்கள் வீரர்களும் இயன்றவரை போராடினர்.
“முதல் பாதி ஆட்டத்தில் எங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்ததும் வியட்னாமுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதும் கண்கூடு.
“இரண்டாம் பாதி ஆட்டத்தில் வியட்னாம் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஒரேயொரு தவறு செய்து கார்னர் வாய்ப்பை விட்டுக்கொடுத்தோம்.
“அதைப் பயன்படுத்தி வியட்னாம் கோல் போட்டது,” என்று விரக்தியுடன் கூறினார் ஃபாண்டி அகமது.