சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் நீருக்கடியிலான ஹாக்கிப் போட்டி அணி இரு தங்கப் பதக்கங்களை வென்றது. ஆண்கள் பிரிவும் பெண்கள் பிரிவும் தங்கம் வென்று சாதித்தன.
ஆண்கள் குழுவுக்கான ஆட்டம் மணிலாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள செர்மோசா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சிங்கப்பூரை எதிர்த்து விளையாடிய பிலிப்பீன்ஸ் அணியினரால் ஒரு கோல்கூட போட இயலவில்லை. அவர்களின் திணறலை சிங்கப்பூர் அணி நன்றாகப் பயன்படுத்தி ஐந்து கோல்களைப் புகுத்தி வாகை சூடியது.
இந்த வெற்றி குறித்து பெரு
மகிழ்வு தெரிவித்த சிங்கப்பூரின் ‘அண்டர்வாட்டர் ஹாக்கி’ ஆண்கள் அணியின் பயிற்றுநர் டேவிட் லாம்பெர்ட் இந்த வெற்றியைப் பெற அணியினர் கடினமாக உழைத்ததாகக் கூறினார். “தண்ணீருக்குள் மூழ்கி விளையாடும்போது சில சமயங்களில் பிராணவாயு முழுமையாகத் தீர்ந்துவிடும். அப்போதும் அவர்கள் கடுமையாகப் பயிற்சி செய்வார்கள்,” என்றார் அவர்.
ஏழு நிமிடங்கள் நடைபெற்ற முதல் பாதியில் மட்டும் சிங்கப்பூர் குழு மூன்று கோல்களைப் புகுத்தியது. கோல் வேட்டையைத் தொடங்கி வைத்தவர் லுயு டோங்லியாங். எஞ்சிய இரு கோல்கள் பின்னர் கிடைத்தன.
மகளிர் அணியினரும் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றனர். ஆயினும் பிலிப்பீன்ஸ் மகளிர் அணி இரு கோல்களைப் புகுத்தியது. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றது.
நீருக்கடியில் ஹாக்கிப் போட்டி முதன்முறையாக ‘சீ கேம்ஸ்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிமுக போட்டியிலேயே சிங்கப்பூரின் ஆண், பெண் குழுவினர் வாகை சூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.