மணிலா: பலிப்பீன்ஸில் நடைபெற்று வரும் 30வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறது.
மகளிருக்கான வாள்சண்டையில் சிங்கப்பூர் அணி நேற்று தங்கம் வென்றது. இறுதிச் சுற்றில் வியட்னாமுடன் சிங்கப்பூர் வீராங்கனைகள் மோதினர்.
தொடக்கத்தில் எதிர்பாராத வகையில் ஆதிக்கம் செலுத்திய வியட்னாம், மளமளவெனப் புள்ளிகளைக் குவித்தது.
ஒருகட்டத்தில் ஏழு புள்ளிகள் அதிகம் பெற்று வியட்னாம் முன்னிலை வகித்தது.
இருப்பினும், தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற அமிதா பெர்தியர், வெள்ளிப் பதக்கம் வென்ற மோக்சின் வோங், டடியானா வோக், டெனிஸ் சான் அடங்கிய சிங்கப்பூர் அணி மனந்தளராமல் போராடியது.
சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் அணி இறுதியில் 45-29 எனும் புள்ளிக் கணக்கில் வாகை சூடியது.
இதற்கிடையே, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் கோல்ஃப் வீரர் ஜேம்ஸ் லியாவ் தங்கம் வென்றுள்ளார்.
ஆடவருக்கான தனிநபர் போட்டியில் 22 வயது லியாவ் சிறப்பாகச் செயல்பட்டு மற்ற போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளினார்.
கடந்த 30 ஆண்டுகளில் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கான தனிநபர் கோல்ஃப் போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்
முறையாகும்.
இதற்கு முன் ஆகக் கடைசியாக 1989ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற தென்
கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் சேம்சன் கிம்சன் தங்கப் பதக்கம் வென்றார்.