ஹைதராபாத்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்து வீச்சைத் தேர்வுசெய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் இணைந்தார். இவர்கள் இந்தியாவின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தனர்.
லிவிஸ் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 40 ஓட்டங்களும் கிங் 31 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஹெட்மையர் 41 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 56 ஓட்டங்கள் அடித்தார். பொல்லார்டு 19 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. ஹோல்டர் 9 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இறங்கினர். ரோகித் சர்மா 8 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார்.
அடுத்து களம் இறங்கிய அணித்தலைவர் விராத் கோஹ்லி, ராகுலுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளைப் பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ஓட்டங்களில் வெளியேறினார்.
இவர் கோஹ்லியுடன் இணைந்து 100 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர் களம் இறங்கிய ரிஷப் பந்த் 18 ஓட்டங்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
மறுமுனையில் தூணாக நின்ற விராத் கோஹ்லி தனது அதிரடியைத் தொடர்ந்தார்.
அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராத் கோஹ்லி 50 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றி மூலம் இந்தியா டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.